முதன் முதலாக உலக அழகி போட்டியில் 2 திருநங்கைகள் பங்கேற்பு: மகுடம் சூடுவார்களா?

கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் மெரினா மஷேடி வெற்றி பெற்று பட்டம் வென்றார்.ரிக்கி கோலே ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதன் முதலாக உலக அழகி போட்டியில் 2 திருநங்கைகள் பங்கேற்பு: மகுடம் சூடுவார்களா?
Published on

எல்சால்வடார்:

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.

72-வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்களுக்கு போட்டியாக 2 திருநங்கைகளும் களம் இறங்கி உள்ளனர். அதில் ஒருவரது பெயர் மெரினா மஷேடி. 23 வயதான இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

மற்றொரு திருநங்கை பெயர் ரிக்கி கோலே. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஆவார். அவர் ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.

உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் 2 திருநங்கைகளில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூட்டினால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.

இது தொடர்பாக ரிக்கி கோலே கூறும் போது, சிறுவயதில் இருந்து நான் என் பாதையில் வந்த அனைத்தையும் வென்றேன். எனக்கு எனது குடும்பத்தினர் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். அவர்கள் ஆதரவால் தான் இது போன்ற சாதனைகளை செய்ய முடிகிறது. தற்போது என்னை பாருங்கள். இங்கே நான் வலிமையான, தன்னம்பிக்கையுடன் உங்கள் முன்பு ஒரு திருநங்கையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com