

திரிகோணமலை:
இலங்கை திரிகோணமலை பகுதியில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள திருச்சட்டனூர் பகுதியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்தது. மேலும் மீன்பிடி போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருச்சட்டனூர் அருகே விஜிதாபுரம் பகுதியில் சிங்களர்கள் அதிகமாக உள்ளனர். இந்த பகுதியையொட்டி உள்ள கரைக்கு அருகே மீன் பிடிப்பது இல்லை என சிங்களர்கள் மற்றும் தமிழர் மீனவர்களுக்கு இடையே இணக்கமான ஒப்பந்தம் உள்ளது.
ஆனால் இதை மீறி மீன்பிடித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அவர்களுக்குள் திடீர் மோதல் உருவானது.
இந்த மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கையில் சிங்கள மற்றும் தமிழர் மீனவர்கள் இடையே நடந்த இந்த திடீர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.