search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அப்போது எங்கே போனீர்கள்?- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரணில் விக்ரமசிங்கே கேள்வி
    X

    அப்போது எங்கே போனீர்கள்?- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரணில் விக்ரமசிங்கே கேள்வி

    • மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.
    • போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களின் புரட்சி போராட்டம் வெடித்ததால் அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

    அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

    இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத்தில் புதிய அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று கடந்த 21-ந்தேதி பதவி ஏற்றார்.

    மறுநாளே அதிபர் மாளிகைக்கு உள்ளேயும், முன்பும் இருந்த போராட்டக்காரர்களை போலீசார், ராணுவத்தினர் அப்புறப்படுத்தினர்.

    அப்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    ஐ.நா.சபை மற்றும் பல நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. ரணில் விக்ரமசிங்கேவை அமெரிக்கா தூதர் சந்தித்து தனது கவலையை தெரிவித்தார்.

    இந்த நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பல வெளிநாட்டு தூதர்கள் கலந்துரையாடல் நடத்தினார்கள். அப்போது ரணில் விக்ரமசிங்கே கூறும் போது:-

    எனது தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது எந்த தரப்பினரும் எவ்வித டுவிட்டர் பதிவுகளையும் வெளியிடாதது குறித்து நான் ஆச்சரியமடைந்தேன். தற்போது கேள்வி எழுப்பும் ஒருவரும் அன்று ஒரு பதிவையேனும் வெளியிடவில்லை என்று கூறினார்.

    அதிபர் மாளிகை முன்பு காலிமுகத் திடலில் இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட போது அவர்களின் கூடாரங்களை போலீசார் அகற்றினர். அதிபர் மாளிகையை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.

    போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதிபர் மாளிகை வளாகத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக சிறப்பு குற்றப்பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×