ஆகஸ்டு 11-ந்தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்புகிறார்?

கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்டு 11-ந்தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்புகிறார்?
Published on

கொழும்பு:

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேக்கு எதிரான மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக கடந்த 13-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் அவர் மறுநாள் (14-ந்தேதி) சிங்கப்பூருக்கு சென்றார்.

அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பினார்.

இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியானது. இதை மறுத்த சிங்கப்பூர் அரசு, கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் வந்துள்ளதாகவும், அவருக்கு தங்கள் நாட்டில் தங்கியிருக்க 14 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா கடந்த 28-ந்தேதி முடிவடைந்த நிலையில் அவருக்கு மேலும் 14 நாட்கள் விசா நீட்டிப்பை சிங்கப்பூர் அரசு வழங்கியது. இதன் மூலம் அவர் வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும்.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய பிறகு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பாராளுமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு ராஜபக்சேவின் கட்சி ஆதரவு அளித்தது. மேலும் அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்களும் ராணுவம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு ராணுவம், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மக்களின் போராட்டம் அடங்கி இருக்கும் சூழலில் கோத்தய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இனப்படுகொலை குற்றச்சாட்டில் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யுமாறு ஐ.நா. சபை அதிகாரி யாஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்து உள்ளது.

சிங்கப்பூர் சட்டப்படி கோத்தபய ராஜபக்சே எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் அவர் மீது இலங்கை அரசும், சர்வதேச இண்டர் போல் அமைப்பும் எந்த புகாரும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com