போதைப்பொருள் வழக்கு: மலேசிய தமிழருக்கு மரண தண்டனை - சிங்கப்பூர் கோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மலேசிய தமிழருக்கு மரண தண்டனை
மலேசிய தமிழருக்கு மரண தண்டனை
Published on

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் போதை பொருள் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்து.

மலேசியாவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் ராகவன்(41), தமிழரான இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் மோட்டார் சைக்கிளில் 900 கிராம் எடைகொண்ட மாவுப் பொருளை ஒரு பையில் எடுத்து கொண்டு சென்று, சிங்கப்பூரைச் சேர்ந்த புங் ஆகியாங் (61) என்பவரிடம் அளித்தார்.

இதுபற்றிய தகவல் சிங்கப்பூர் போலீசாருக்கு தெரியவரவே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புங் ஆகியாங்கிடம் இருந்த பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.

அப்போது அந்த பையில்  36.5 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. சிங்கப்பூர் சட்டப்படி, ஒருவர் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும்.இதையடுத்து போலீசார் அவர்கள் புங் ஆகியாங் மற்றும் போதை பொருளை எடுத்து வந்த தமிழரான கிஷோர்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கிஷோர்குமார் ராகவன் தரப்பில் ஆஜரான வக்கீல், தனது கட்சிகாரருக்கு அவர் எடுத்து சென்றது ஹெராயின் என்பது தெரியாது என வாதிட்டார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, கிஷோர்குமார் ராகவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும்  மற்றொரு குற்றவாளியான புங் ஆகியாங் போலீஸ்  விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், அவருக்கு மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கியும் தீர்ப்பு அளித்ததாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com