தென் கொரியா அதிபரை கைது செய்ய முயற்சி- ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

அதிபரை கைது செய்ய விடமாட்டோம் என கோஷமிட்டனர்.தென்கொரியா வரலாற்றில் அதிபர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
தென் கொரியா அதிபரை கைது செய்ய முயற்சி- ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
Published on

சியோல்:

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து அந்நாட்டு அதிபர் யூன்-சுக் இயோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை அதிபர் திரும்ப பெற்றார்.

இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவருக்கு எதிராக சியோல் கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவியது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். தென்கொரிய தலைநகர் சியோலில் அவர்கள் சாலையில் படுத்து உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

சியோலில் உள்ள அவரது இல்லம் முன்பும் ஏராளமானவர்கள் திரண்டனர். நேற்று இரவே மத போதகர்கள் உள்ளிட்ட பலர் குவிந்தனர். அவர்கள் விடிய விடிய பிரார்த்தனை நடத்தினார்கள். அதிபரை கைது செய்ய விடமாட்டோம் என கோஷமிட்டனர்.

அவர்கள் எதிர்க்கட்சி தலைவரை கைது செய்யவேண்டும் என்றும் வடகொரியாவை போல நமது நாட்டை சோசலிச நாடாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிபரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினார்கள்.

அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதால் 3 ஆயிரம் போலீசார் அதிபர் வீடு முன்பு குவிக்கப்பட்டனர். அவர்கள் தடுப்புகள் அமைத்து ஆதரவாளர்கள் மேலும் முன்னேற விடாமல் தடுத்தனர்.

இந்த நிலையில் யூன்-சுக் இயோலை கைது செய்யும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் குழுவினர் இறங்கினார்கள். இன்று காலை அவர்கள் மத்திய சியோலில் உள்ள அவரது இல்லத்துக்குள் நுழைந்தனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com