search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அதிகரிக்கும் வெப்பம்.. ஏ.சி. விற்பனை.. பருவநிலை நெருக்கடி.. ரிப்பீட்டு: ஆபத்தான சுழற்சியால் தவிக்கும் மக்கள்
    X

    அதிகரிக்கும் வெப்பம்.. ஏ.சி. விற்பனை.. பருவநிலை நெருக்கடி.. ரிப்பீட்டு: ஆபத்தான சுழற்சியால் தவிக்கும் மக்கள்

    • வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது
    • இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது

    இவ்வருடம் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் பூமியில் ஒரு சில இடங்களில் அதிக வெள்ளம், மழை போன்ற இயற்கை பேரிடர் தோன்றியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் அங்கெல்லாம் வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது.

    இச்சாதனங்களின் உதவியால் வெப்பம் சார்ந்த உடல் ஆரோக்கிய குறைபாடுகள் குறைவது மட்டுமின்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இது குறைக்கிறது. உயிர் வாழ்வதற்கே இவை அவசியமான கருவிகளாக மாறி விட்டன.

    ஆனால் ஏர் கண்டிஷனர்கள் அதிக மின் சக்தி தேவைப்படும் சாதனங்கள். இதனால் இவற்றின் அதிக பயன்பாடு பருவநிலை நெருக்கடிக்கு (climate crisis) ஒரு காரணமாக அமைகிறது.

    சர்வதேச ஆற்றல் ஏஜென்சி அளிக்கும் தகவல்களின்படி, உலகம் முழுவதும் வெளியிடப்படும் 37 பில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு அளவில், சுமார் 1 பில்லியன் மெட்ரிக் டன் அளவு வெளியேற்றத்திற்கு ஏர் கண்டிஷனிங் சாதனங்களே காரணமாகிறது. இதன் மூலம் மீண்டும் காற்றில் அதிக வெப்பம் உருவாகும். இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது.

    2050 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்ட குடும்பங்களின் விகிதம் 10% முதல் 40% வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஏர் கண்டிஷனர்கள் பொதுவாக ஃப்ளோரோகார்பன் வாயுக்களை அதன் இயக்கத்திற்காக பயன்படுத்துகின்றன. அந்த வாயு வளிமண்டலத்தில் கலக்கும்.

    எனவே, கரியமில வாயு வெளியேறுவதால் வரும் வெப்பமயமாதலை விட, இந்த வாயுவால் ஆயிரக்கணக்கான மடங்கு அதிக வெப்பமயமாதல் நிகழ வாய்ப்புண்டு.

    மேலும், மின்சாரக் கட்டணத்தின் விலை ஏறும் போது இவற்றின் பயன்பாடு குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை மாற்றியமைக்கலாம்.

    புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி வழிகளை அதிகரிப்பதன் மூலமும், குறைந்த ஆற்றல் கொண்ட ஏர் கண்டிஷனர்களை உருவாக்குவதன் மூலமும், மற்றும் இதர குளிரூட்டும் தொழில்நுட்பங்களை பெருக்குவதன் மூலமும், இந்த தீய சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×