

கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே கடந்த வாரம் இரு நாடுகளும் 2 வார போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தன. ஆனால் நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
தொடர்ந்து ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே போரின்போது அமெரிக்கா தனது அதிநவீன F35 போர் விமானங்கள் மூன்றை ஈரான் தாக்குதலில் இழந்தது. அதேவேளை ஈரானுடனான போரில், 2,222 கோடி ரூபாய் (238 மில்லியன் டாலர்) மதிப்புள்ள MQ-4C டிரைட்டன் எனப்படும் கண்காணிப்பு டிரோன் ஒன்றை அமெரிக்கா இழந்துள்ளது.
இந்த மாதம் 9 ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. டிரோன் அழிந்ததை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த கண்காணிப்பு டிரோன் விபத்துக்குள்ளானது, அதன் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று என அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது.
சர்வதேச வான்வெளியில் ஹார்முஸ் அருகே டிரைட்டன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அது திடீரென 50,000 அடி உயரத்தில் இருந்து 10,000 அடி உயரத்திற்குக் கீழே இறங்கியது. அதன் பிறகு அது மறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.