லிட்டர் கணக்கில் ரத்தம் சொட்ட...: ஆகாய பயணத்தில் அலறல்

முதியவரின் மூக்கிலும், வாயிலும் இருந்தும் ரத்தம் அதிகமாக வெளியேறியதுசிபிஆர் முறையில் சுவாச மீட்புக்கு மருத்துவரும் பணியாளர்களும் முயன்றனர்
லிட்டர் கணக்கில் ரத்தம் சொட்ட...: ஆகாய பயணத்தில் அலறல்
Published on

கடந்த வியாழன் அன்று, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஜெர்மனியின் மியூனிச் (Munich) நகருக்கு புறப்பட்டு சென்ற ஒரு லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் 63 வயதான ஒரு பயணி, தன் மனைவியுடன் பயணித்தார்.

அந்த முதியவர் விமானத்தில் ஏறும் போதே வேகவேகமாக சுவாசித்து கொண்டு, வியர்வை குளியலில் உள்ளே நுழைந்தார்.

சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்டது.

அப்போது அந்த முதியவரின் மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் திடீரென லிட்டர் கணக்கில் ரத்தம் வழிய தொடங்கியது.

அவரது மனைவி உதவி கேட்டு கூக்குரலிட்டார். அதிகமாக ரத்தம் கொட்டுவதை கண்ட சக பயணிகளும் கூச்சலிட்டதில் உடனிருந்த சில பயணிகள் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒரு சிலர், அவரது நாடி துடிப்பை பரிசோதித்தனர். 

ரத்தம் வெளியேறுவது நிற்காமல், அந்த ஜெட் விமானத்தில் அந்த பயணியின் இருக்கைக்கு அருகே உள்ள உட்புற சுவர்களில் ரத்தம் பீய்ச்சி அடித்தது.

அதை தொடர்ந்து அவர் மயக்க நிலைக்கு சென்றார்.

சுமார் அரை மணி நேரம், விமான பணியாளர்களும், அங்கு இருந்த மருத்துவர் ஒருவரும், அவருக்கு "இதய-நுரையீரல் புத்துயிர் சிகிச்சை" (CPR) வழிமுறையை கையாண்டு சுவாச மீட்புக்கு முயற்சித்தனர்.

ஆனால், சிகிச்சை முறைகள் பலனளிக்காமல், அந்த முதியவர் உயிரிழந்தார்.

விமான கேப்டன் அவர் உயிரிழந்ததை அறிவித்ததும், விமானத்தில் சோகமான அமைதி நிலவியது.

இதையடுத்து விமானம், தாய்லாந்திற்கு திருப்பப்பட்டது.

அந்த முதியவரின் மனைவி, பெரும் சோகத்திற்கு இடையே அனைத்து விதமான சட்டபூர்வ வழிமுறைகளையும், தனியொருவராக கையாண்டது பார்ப்பவரின் மனதை நெகிழ செய்தது.

இது குறித்து லுஃப்தான்சா விமான நிறுவனம், "அனைத்துவிதமான உதவிகளும் வழங்கப்பட்டும் அந்த முதியவர் உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. அவரது உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். எதிர்பாராதவிதமாக சக பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என அறிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com