பாகிஸ்தானில் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை.தேர்தல் முடிவு காலதாமதம் ஆனதால் இம்ரான் கான் கட்சி இன்று போராட்டம் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு
Published on

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கடந்த 8-ந்தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கினாலும் அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே வாக்குப்பதிவின் போது பல இடங்களில் வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன. இவ்வாறு சேதம் அடைந்த வாக்குசாவடிகள் குறித்து தகவல் சேகரித்து வருகிறது தேர்தல் ஆணையம். மேலும், தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

அதன்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் வருகிற 15-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவுக்குள் அனைத்து இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இன்று போராட்டம் நடத்தப்படும் என இம்ரான் கான் கட்சி தெரிவித்திருந்தது. இன்று காலை வரை சுமார் 10 தொதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அதனால் அறிவித்தபடி அக்கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

265 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதாக தெரிவித்தனர். தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று உள்ளதாக அந்த கட்சியினர் அறிவித்தனர்.

மேலும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினர். ஆனால் தேர்தலில் தனது கட்சி தான் வெற்றி பெற்றதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

255 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமா் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளா்கள் 101 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. 27 இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றிப் பெற்றன.

ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்கிற நிலையில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெற வில்லை. இதனால் ஆட்சியை அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது.

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசை அமைக்க நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்து உள்ளார். மேலும் அவரது கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பிற கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நவாஸ் ஷெரீப்-பிலாவல் பூட்டோவின் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இன்னும் அவர்களுக்கு 6 இடங்கள் தேவைப்படுகிறது.

ஆனால் நவாஸ் ஷெரீப் கட்சியுடன் அதிகாரப்பூர்வ மாக இன்னும் பேச்சு வார்த்தை எதுவும் நடத்த வில்லை என்று பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

இதற்கிடையே சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. 3 சுயேட்சை வேட்பா ளர்கள் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். நவாஸ் ஷெரீப் புக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com