

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கவும், மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் புதன்கிழமையை பொதுவிடுமுறை நாளாக அறிவித்துள்ளது இலங்கை அரசு.
தற்போது இலங்கை ஐந்துநாள் வேலைமுறையைப் பின்பற்றி வரும்நிலையில், இந்த அறிவிப்பால், இப்போது 4 நாட்கள் மட்டுமே அங்கு வேலைநாட்களாக இருக்கும். 3 நாட்கள் விடுமுறையாக இருக்கும்.
“மார்ச் 18 முதல் ஒவ்வொரு புதன்கிழமையையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,” என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
சுகாதாரத் துறை (மருத்துவமனைகள்), துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத்துறை போன்ற அத்தியாவசிய சேவைப் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும், அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.