search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நன்கொடையா? இரு வேட்பாளர்களுக்குமே இல்லை - கை விரித்த மஸ்க்
    X

    "நன்கொடையா? இரு வேட்பாளர்களுக்குமே இல்லை" - கை விரித்த மஸ்க்

    • வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வருகிறார் டொனால்ட் டிரம்ப்
    • புளோரிடாவில் டிரம்ப் மற்றும் மஸ்க் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

    பல்வேறு மாநிலங்களில் பதிவான வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வரும் டிரம்ப், பிரசாரங்களுக்கான நிதி கட்டமைப்பில் பைடனை விட பின் தங்கி உள்ளார்.

    தனது பிரசாரத்திற்கு பெரும் நிதி தேவைப்படுவதால், டிரம்ப் குடியரசு கட்சியை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களை சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார்.

    இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கோடீசுவரரான எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் புளோரிடா மாநில மியாமியில் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.

    டிரம்ப்பை, மஸ்க் ஆதரிக்கும் பட்சத்தில் ஜோ பைடனின் வெற்றி வாய்ப்புகள் குறையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், வரவிருக்கும் அதிபர் தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களில், எவருக்கும் தான் நிதியுதவி அளிக்க போவதில்லை என எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் திட்டவட்டமாக அறிவித்தார்.

    மஸ்கின் இந்த அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் என கூறும் அரசியல் விமர்சகர்கள், நேரடியாக வேட்பாளருக்கு நிதியுதவி செய்ய மஸ்க் மறுத்தாலும், அரசியல் கட்சிகளின் கமிட்டிகளுக்கு அவரது நிறுவனங்கள் அளிக்க கூடிய நன்கொடைகள் மூலம் நிதியளிக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் $192 பில்லியன் நிகர மதிப்பு உள்ள எலான் மஸ்க், ஜோ பைடனின் குடியேற்ற மற்றும் அகதிகள் மறுவாழ்வு தொடர்பான கொள்கைகளை விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×