search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நேபாளத்தில் பாராளுமன்ற, 7 மாகாண சட்டப்பேரவை தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு
    X

    வாக்குச்சாவடி

    நேபாளத்தில் பாராளுமன்ற, 7 மாகாண சட்டப்பேரவை தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

    • தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

    இந்த தேர்தலில் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுன்றம் தேர்தலில் போட்டியிடும் 2,412 வேட்பாளர்களில் 867 பேர் சுயேட்சைகள். முக்கிய அரசியல் கட்சிகளில், சிபிஎன்-யுஎம்எல் 141 வேட்பாளர்களையும், நேபாள காங்கிரஸ் 91 வேட்பாளர்களையும், சிபிஎன்-மாவோயிஸ்ட் சென்டர் 46 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.

    பாராளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல் மொத்தமுள்ள 550 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என்றும், போதுமான அரசியல் ஸ்திரதன்மையை வழங்க வாய்ப்பில்லாத அரசு அமையும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

    மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச எல்லையோரம் உள்ள 77 மாவட்டங்களிலும் 72 மணி நேரத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில், இந்தியா-நேபாள எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாள் என மொத்தம் 48 மணி நேரம் மது விற்பனை, மது குடித்தல் மற்றும் அவற்றை வாகனங்களில் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

    Next Story
    ×