

ஈரான் - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டதை அடுத்து கடந்த வாரம் முதல் ஹார்முஸ் திறக்கப்பட்டு, தாக்குதல்கள் ஓய்ந்து மத்திய கிழக்கில் அமைதி திரும்பியது.
ஆனால் முழுதாக ஒரு வாரம் முடிவதற்குள் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தங்கள் மீது டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக பஹ்ரைன் நேற்று குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் முக்கியத் தளம் பஹ்ரைனில் அமைந்துள்ளது.
இந்த சூழலில் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த டிரோன் தாக்குதலானது பஹ்ரைன் நாட்டின் இறையாண்மையை மீறும் செயலாகும் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக, நேற்று இரவு ஈரானின் ஏவுகணை, டிரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் நிலையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே, பஹ்ரைனில் உள்ள அமெரிக்கப் படைகளுடன் தொடர்புடைய இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
மறுபுறம், "நாங்கள் எப்போதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்கிறோம். ஆனால், எங்களின் மீதான எந்தவொரு விதிமீறல்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
வன்முறைக்கு வன்முறை மூலமாகவே பதில் அளிக்கப்படும்." என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் எச்சரித்துள்ளார்.