

தெக்ரான்:
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கி உள்ள நிலையில் திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இதை நிராகரித்த ஈரான், தங்களது மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலையங்களை தாக்குவோம் என்று தெரிவித்தது.
இதற்கிடையே ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருவதால் ஈரானின் எரிசக்தி மற்றும் மின்நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று ஈரான் தெரிவித்தது.
இந்த நிலையில் தங்கள் மீதான அனைத்து தடைகளும் நீக்கப்படும் வரை போர் தொடரும் என்று ஈரான் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஈரான் உச்ச தலைவரின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி கூறியதாவது:-
போரில் ஈரானுக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு, எங்கள் மீதான தடைகள் நீக்கப்படும் வரை போர் தொடரும். மேலும் ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்பதற்கு சர்வதேச உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். இது ஈரான் மக்கள், உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி மற்றும் ஆயுதப்படைகளின் முடிவு ஆகும். இவைகள் நிறைவேறும் வரை போரை ஈரான் முடிவுக்கு கொண்டு வராது.
எங்களின் உள்கட்டமைப்பைத் தாக்கினால், இனி அது கண்ணுக்குக் கண் என்ற பதிலடியாக இருக்காது. கண்ணுக்கு தலை, கை, கால் போன்ற தாக்குதலாகவே இருக்கும். அமெரிக்கா முடங்கிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.