

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு காலக்கெடு நிர்ணயித்த போதிலும், தாக்குதலையும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
ஈரானின் தெற்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் F-15E போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்து இரண்டு விமானிகள் கீழே குதித்து உயிர் தப்பினார்கள்.
ஈரான் கையில் இருவரும் மாட்டிவிடக் கூடாது என அமெரிக்கா தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் ஒருவரை உடனடியாக கண்டுபிடித்து மீட்டது. ஒருவரை காணவில்லை. அந்த இடத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
இதனால் அந்த விமானியை தேடும் பணி கடுமையானதாக மாறியது. இதற்கிடையே அமெரிக்க விமானியை பிடித்து, அதன்மூலம் போர் தந்திரங்களை நகர்த்தலாம் என ஈரான் நினைத்தது. இதனால் அமெரிக்கா விமானியை கண்டுபிடித்து ஒப்படைத்தால் பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மீட்புப்படை அந்த விமானியை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய அடையாளம் வெளியிடப்படவில்லை. மேலும், ஈரான் பிராந்தியத்தில் இருந்து அவர் வெளியேறவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கடுமையான சண்டை நடைபெற்று வருதால் ஈரான் எல்லையில் இருந்து வெளியேறுவது சவாலானதாக இருக்கலாம்.