

அமரிக்காவுடன் 2 வார போர் நிறுத்தத்திற்கு ஈரான் பாதுகாப்பு கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 10 அன்று பேச்சுவார்த்தை தொடங்குவதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த போர் நிறுத்தத்திற்கு ஈரான் 10 நிபந்தனைகளுடன் சம்மதம் தெரிவித்துள்ளது.
அவை பின்வருமாறு,
1) ஈரான் மீது இனி எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் உறுதி அளிக்க வேண்டும்.
2) ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப்பாதையை ஈரான் தனது ராணுவக் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து வைத்திருக்கும்.
3) ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் உரிமையை சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும்.
4) அமெரிக்கா நேரடியாக ஈரான் மீது விதித்துள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும்.
5) மற்ற நாடுகள் ஈரானுடன் வணிகம் செய்வதைத் தடுக்கும் இரண்டாம் நிலை தடைகளையும் நீக்க வேண்டும்.
6) ஈரான் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள அனைத்துப் பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
7) சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர் குழு ஈரானுக்கு எதிராகப் பிறப்பித்த உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும்.
8) போரினால் ஏற்பட்ட உள்கட்டமைப்புச் சேதங்களுக்கு அமெரிக்கா ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
9) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து தளங்களிலிருந்தும் அமெரிக்கப் போர் படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.
10) ஈரான் மட்டுமல்லாது லெபனான், ஈராக், ஏமன் போன்ற பகுதிகளில் உள்ள ஈரானின் நட்பு குழுக்கள் மீதான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும்.
அதிபர் டிரம்ப் இந்தத் திட்டத்தைப் பேச்சுவார்த்தைக்கான "பரிசீலிக்க சாத்தியமானவை" (Workable basis) என்று குறிப்பிட்டுள்ளார்.