மெக்சிகோ வழிப்பறியில் இந்தியர் சுட்டுக்கொலை: ரூ.8 லட்சம் கொள்ளை

சுமார் 8 ஆயிரம் இந்தியர்கள் மெக்சிகோவில் வசிக்கின்றனர்காரை இடைமறித்து நிறுத்துமாறு மிரட்டியும், இந்தியர் பணிய மறுத்தார்
மெக்சிகோ வழிப்பறியில் இந்தியர் சுட்டுக்கொலை: ரூ.8 லட்சம் கொள்ளை
Published on

வட அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள நாடு மெக்சிகோ. இதன் தலைநகரம் மெக்சிகோ சிட்டி.

உலகில் குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் ஆள் கடத்தல், துப்பாக்கிச்சூடு, கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமான ஒன்று.

மெக்சிகோ நாட்டில் சுமார் 8 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மென்பொருள் சம்பந்தமான பணிகளுக்காக மெக்சிகோ சிட்டியில் வசித்து வருகின்றனர்.

மெக்சிகோ சிட்டியின் மிகல் அலெமன் வயாடக்ட் (Miguel Aleman Viaduct) எனும் பகுதியில் 3 தினங்களுக்கு முன்பு ஒரு இந்தியர் மற்றொருவருடன், மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஒரு பணப்பரிமாற்ற நிலையத்திலிருந்து சுமார் ரூ.8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை எடுத்து கொண்டு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள், அவரது காரை இடைமறித்து நிறுத்துமாறு மிரட்டினர்.

இதற்கு அந்த இந்தியர் பணியாததால், பணத்தை கொள்ளையடிக்க முயன்ற அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் காரை ஓட்டிச்சென்ற இந்தியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொள்ளையர்கள், பணத்தை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதனையடுத்து அவருடன் பயணித்தவர் உடனே காவல்துறைக்கும், அவசர மருத்துவ சேவைக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்த இந்தியருடன் வந்த மற்றொருவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.

"இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொண்டிருக்கிறோம். மெக்சிகோ நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய கோரியிருக்கிறோம்" என மெக்சிகோ நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இறந்த இந்தியரின் பெயரோ மற்ற விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com