

இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து கடந்த 1 மாதமாக ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக ஈரான், யுஏஇ, சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்களை தாக்கி வருகிறது.
இன்று சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் சுல்தான் படைத்தளம் தாக்கப்பட்டதில் அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, "ஈரான் ஒருபோதும் போரைத் தானாகத் தொடங்காது. ஆனால், ஈரானின் உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், அதற்கு மிக வலிமையான பதிலடி கொடுக்கப்படும்.
உங்கள் நாட்டில் வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பை நீங்கள் விரும்பினால், உங்கள் நிலத்தைப் பயன்படுத்தி எதிரிகள் போர் நடத்த அனுமதிக்காதீர்கள்.
அண்டை நாடுகளுடன் நிலையான மற்றும் சுமூகமான உறவையே ஈரான் விரும்புகிறது.
ஆனால் அந்த நாடுகளின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு அந்த நாடுகளே பொறுப்பேற்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார்.