

அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்புக்கு எதிராக, யாரும் மன்னர் இல்லை என்ற தலைப்பில் மிகப் பெரிய போராட்டங்கள், பேரணிகள் நடந்தன.
ஈரான் மீதான போர் மற்றும் டிரம்பின் கொள்கைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக இந்த போராட்டங்கள் நடந்தது.
தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஜார்ஜியா, மினசோட்டா, சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, புளோரிடா, பிலடெல்பியா உள்பட நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பேரணிகள் நடந்தது.
இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அப்பகுதி ஸ்தம்பித்தது.
பேரணிகளில் பங்கேற்றவர்கள் டிரம்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். போர் வேண்டாம், குடியேற்றம் தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.
ஏற்கனவே யாரும் மன்னர்கள் இல்லை என்ற போராட்டம் அமெரிக்கா முழுவதும் 2 முறை நடத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் நடந்த போராட்டத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், அக்டோபரில் நடந்த போராட்டத்தில் 70 லட்சத்திற்கும் மேற் பட்டோரும் கலந்து கொண்டனர்.
தற்போது நடந்த போராட்டங்களில் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.