அமெரிக்காவின் எச்சரிக்கை நிராகரிப்பு: வெடிபொருள் அடங்கிய படகை வெடிக்கச் செய்த ஹவுதி

செங்கடலில் சர்வதேச கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.தாக்குதல் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை.
அமெரிக்காவின் எச்சரிக்கை நிராகரிப்பு: வெடிபொருள் அடங்கிய படகை வெடிக்கச் செய்த ஹவுதி
Published on

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். இதையடுத்து செங்கடலில் இஸ்ரேலில் இருந்து செல்லும் கப்பல் மற்றும் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. செங்கடலில் அமெரிக்க போர் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசும் ஏவுகணை மற்றும் டிரோன்களை இடைமறித்து அழித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கொண்ட கூட்டுப்படைகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் இல்லையென்றால் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் எச்சரிக்கையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிராகரித்து அடிபணிய மறுத்துள்ளனர். அவர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் ஆளில்லா படகு ஒன்றை அனுப்பினர். அமெரிக்கா கடற்படை மற்றும் செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல்கள் இருந்த 2 மைல்கள் பகுதிக்குள் அந்த ஆளில்லா டிரோன் படகு வெடித்தது. இதில் எந்த சேதமும் அல்லது உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க கடற்படை தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com