

ஈரான் மோதல் தொடர்பான இடையூறுகள் மற்றும் உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து தடமான ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, வரும் மாதங்களில் மேலும் மோசமடையக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) நிர்வாக இயக்குநர் ஃபாத்திஹ் பிரோல் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கிலிருந்து புதிய எண்ணெய் ஏற்றுமதியில் நிலவும் பற்றாக்குறையின் காரணமாக ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் உலகளாவிய எண்ணெய் சந்தைகள் "சிவப்பு மண்டலத்திற்குள் (Red Zone)" நுழையக்கூடும் என்று பைரோல் எச்சரித்துளார்.
இந்த இடையூறு காரணமாக, நாள் ஒன்றுக்கு சுமார் 14 மில்லியன் பீப்பாய் எண்ணெய் தற்போது சந்தையில் விநியோகத்திற்கு இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று IEA தலைவர் கூறினார்.
மேலும், இந்த நெருக்கடியானது 1973 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் தூண்டப்பட்ட 2022-ம் ஆண்டு எரிசக்தி நெருக்கடியையும் விட மிகவும் கடுமையானது என்றும் அவர் விவரித்தார்.
ஈராக் போன்ற எண்ணெய் வருவாயை பெரிதும் சார்ந்துள்ள நாடுகள், இந்த நெருக்கடியால் ஏற்பட்ட நிதி இழப்புகளின் காரணமாக எரிசக்தி உற்பத்தியில் மீண்டும் முதலீடு செய்ய சிரமப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட எண்ணெய் உற்பத்தி நாடுகள், தங்களுடைய முழு உற்பத்தியையும் ஒரு வருடத்திற்கு முன்பாக தொடங்க வாய்ப்பில்லை என்றும் பைரோல் கூறினார்.
இதற்கிடையில் இந்தியாவில், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சீர்குலைவுகளுக்கு மத்தியில், மாற்று எரிசக்தி ஆதாரங்களை ஆராயுமாறு பிரதமர் நரேந்திர மோடி பல அரசுத் துறைகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டியதன் அவசியத்தையும், அதே நேரத்தில் எரிசக்தி தன்னிறைவை நோக்கிய நாட்டின் பயணத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.