search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வெறுப்புணர்ச்சிக்கு உலகில் இடமே இல்லை - ஐ.நா. பொதுச்சபை அதிபர்
    X

    "வெறுப்புணர்ச்சிக்கு உலகில் இடமே இல்லை" - ஐ.நா. பொதுச்சபை அதிபர்

    • இரு தரப்புக்கும் ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன
    • வெறுப்பு பேச்சு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்றார் டென்னிஸ்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    உலக அளவில் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் மக்களில் பலர் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் இதனால் வன்முறை வெடித்துள்ளது.

    இந்நிலையில் இது குறித்து ஐ.நா. பொதுச்சபையின் 78-வது அமர்வில், அச்சபையின் அதிபர் டென்னிஸ் ஃப்ரான்ஸிஸ் (Dennis Francis) உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அக்டோபர் 7 தொடங்கி உலகம் முழுவதும் அதிகரித்துள்ள வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் கவலையளிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதது. உலக மக்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். நாம் வாழும் உலகில் வெறுப்புணர்ச்சிக்கு இடமே இல்லை. மனிதர்களுக்கு இடையே பாகுபாடுகள் எந்த வழியில் நடந்தாலும் அதனை நாம் புறக்கணிக்க வேண்டும். வலி தரும் காயங்களை வெறுப்பு பேச்சுக்கள் ஆழமாக்கும். அவநம்பிக்கையயும், வன்முறையையும் இது ஊக்குவிக்குமே தவிர எந்த சிக்கலையும் தீர்க்காது. ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளும் கண்ணியமான கருத்து பரிமாற்றங்களும் மட்டுமே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும். உலக சமுதாயம் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது உரையில், மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் முதல் வரியான "அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்கள். அனைவருக்கும் உரிமைகள் உண்டு" என்பதை நினைவுகூர்ந்தார் பிரான்ஸிஸ்.

    Next Story
    ×