உலகளாவிய ஊழல் குறியீடு வெளியீடு: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

இந்தியா 100-க்கு 39 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.28 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 136வது இடத்திலும், 24 மதிப்பெண்ணுடன் வங்கதேசம் 150வது இடத்திலும் உள்ளது.
உலகளாவிய ஊழல் குறியீடு வெளியீடு: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
Published on

உலகளவில் பொதுத்துறையில் நிலவும் ஊழல் குறித்த Corruption Perceptions Index - CPI குறியீடு 2025 அறிக்கையை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில், அதிக மதிப்பெண் பெற்றால் அரசு நிர்வாகத்தில் ஊழல் குறைந்து பட்டியலில் முன்னேறி இருப்பதாகவும், குறைந்த மதிப்பெண் பெற்றால் ஊழல் மலிந்த நாடுகளாக பின்தங்கி இருப்பதாவும் வரையறுக்கப்படுகிறது.

மொத்தம் 182 நாடுகளின் பட்டியலில் உலகின் மிகக் குறைந்த ஊழல் கொண்ட நாடாக டென்மார்க் 100-க்கு 89 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 84 மதிப்பெண்ணுடன் 3வது இடத்தில் உள்ளது.

பட்டியலில் இந்தியா 91-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் 96-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 5 இடங்கள் முன்னேறி 91-வது இடத்திற்கு வந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தியா 100-க்கு 39 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதேநேரம் 28 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 136வது இடத்திலும், 24 மதிப்பெண்ணுடன் வங்கதேசம் 150வது இடத்திலும் உள்ளது.

ஊழல் குறித்த இந்தப் பட்டியலில் டென்மார்க் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், சோமாலியா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன.

உலகளாவிய சராசரி மதிப்பெண் 42 ஆகவும், ஆசிய-பசிபிக் பிராந்திய சராசரி 45 ஆகவும் உள்ளது.

இந்தியாவின் 39 மதிப்பெண் இந்த இரண்டு சராசரிகளை விடவும் குறைவாகவே உள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் நிலவும் ஊழல், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பலவீனமான சட்டங்கள், பொறுப்பற்ற தலைமைத்துவம் மற்றும் அரசியல் நிதியுதவியில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஆகியவை பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் நல்லாட்சியை பலவீனப்படுத்துகின்றன" என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆசிய பசிபிக் ஆலோசகர் இல்ஹாம் முகமது ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.   

X

Maalai Malar
www.maalaimalar.com