"வாட்ஸ் அப்" தகவல் பரிமாற்றம்: 22-வயது மாணவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

இக்குற்றம் புரிந்தவர்கள் அங்கு பொதுவெளியில் நிற்க வைத்து அடிக்கப்பட்டனர்மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை மேல்முறையீடு செய்ய உள்ளார்
"வாட்ஸ் அப்" தகவல் பரிமாற்றம்: 22-வயது மாணவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
Published on

பாகிஸ்தானில், இறை நம்பிக்கைகளையும், இறை வழிபாட்டையும் நிந்தனை செய்வதும், பழித்து பேசுவதும், கடும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது.

ஆனால், இதுவரை அந்நாட்டில், இக்குற்றத்திற்கு பொதுவெளியில் நிற்க வைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 2022ல், இறை நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக "வாட்ஸ் அப்" செயலியில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக குற்றம் சாட்டி ஒரு 22-வயது மாணவர் மற்றும் 17-வயது மாணவர் ஒருவர் மீது பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு முகமையின் (Federal Investigation Agency) சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கு விசாரணை பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இரு மாணவர்களும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என கூறி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை குஜ்ரன்வாலா (Gujranwala) நகர நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தற்போது இதனை விசாரித்த நீதிபதிகள் 22-வயது மாணவருக்கு மரண தண்டனை விதித்தும் 17-வயது மாணவருக்கு - அவர் சிறார் என்பதால் - ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தனர்.

இரண்டு மாணவர்களும் பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை, லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

1980களில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடைபெற்ற காலகட்டங்களில் "இறை நிந்தனை" குற்றத்திற்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக சட்டங்கள் மாற்றப்பட்டன.

அந்த இரு மாணவர்களை குறித்து தற்போது வரை வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com