என் மலர்
உலகம்

'சாட் ஜி.பி,டி.' மூலம் போலி செய்தியை பரப்பியவர் கைது- சீன போலீஸ் நடவடிக்கை
- சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
- தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக கருதப்படுவது சாட்ஜிபிடி.
இங்கு சாட் ஜி.பி.டி. எனும் செயற்கை நுண்ணறிவு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமாக, விரிவாக பதில்களை அளித்து விடும்.
இது தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறினாலும் அதில் அதிக ஆபத்துகளும் உள்ளன என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சாட் ஜி.பி.டி.யை தவறாக பயன்படுத்தியதற்காக சீனாவில் முதல் முதலாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் ரெயில் விபத்தில் 9 பேர் பலியான தாக இணையத்தில் போலி செய்தி ஒன்று பரவியது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலி செய்தியை பரப்பியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஹாங் என்ற குடும்பப் பெயர் கொண்ட சந்தேக நபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகள் சீனாவில் கடந்த ஜனவரியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
அதன்பிறகு தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஹாங், போலி செய்திகளை உருவாக்கி அவற்றை தனது கணக்குகளில் பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.






