

துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல் படையின் 'ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் ஜோல்பகாரி இதை அறிவித்துள்ளார்.
அவர் கூற்றுப்படி, "பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தினர் துபாயில் உள்ள இரண்டு ரகசிய இடங்களுக்குத் தப்பியோடி ஒளிந்திருந்தனர்.
முதல் மறைவிடத்தில் 400 வீரர்களும், இரண்டாவது மறைவிடத்தில் 100 வீரர்களும் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் அங்கு தங்கியிருந்தனர்.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இந்த இடங்களைக் கண்டறிந்து துல்லியமான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அமெரிக்கத் தரப்பில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதிபர் டிரம்ப்பும் அமெரிக்க ராணுவத் தளபதிகளும் இந்தப் பிராந்தியம் அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டியாக மாறும் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாமிய வீரர்களின் தெய்வீக விருப்பத்திற்கு அடிபணிவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை" என்று எச்சரித்துள்ளார்.
முன்னதாக நேற்று அபுதாபியின் கலீஃபா பொருளாதார மண்டலம் மற்றும் சவுதியின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, துபாயிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் கூறுவது வளைகுடா நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அமெரிக்க ராணுவம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே மேலும் 3,500 அமெரிக்க வீரர்கள் மத்திய கிழக்குக்கு போர்கப்பல்களில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் ஈரான் எல்லையில் குவிக்கப்பட உள்ளனர் என கூறப்படும் நிலையில் ஈரான் மண்ணில் அவர்கள் கால்வைத்தால் சவப்பெட்டிகளில் தான் அமெரிக்கா திரும்புவார்கள் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.