

வங்கதேசத்தின் தென்மேற்கில் உள்ள ராஜ்பாரி அருகிலுள்ளது தவுலத்தியா படகு முனையம். இங்கு பத்மா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் தலைநகர் டாக்காவை தென்மேற்கு பகுதியில் இருந்து பிரிப்பதால் இந்த ஆற்றைக் கடக்க படகுப் போக்குவரத்தே முக்கியமானதாக உள்ளது.
பஸ்கள் மற்றும் சிறு வாகனங்களும் படகுகள் மூலமாகவே ஆற்றைக் கடந்து சென்று, சாலைப் பயணத்தை தொடர்கின்றன.
இந்நிலையில், தலைநகர் டாக்கா நோக்கி பயணிகள் பஸ் ஒன்று நேற்று மாலை 5.15 மணி அளவில் சென்றுகொண்டிருந்தது. அதில் 40 பேர் பயணம் செய்தனர். அந்த பஸ் தவுலத்தியா முனையத்தில் மிதவைப் பாலத்தில் ஏறும்போது திடீரென பத்மா ஆற்றில் கவிழ்ந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆற்றில் விழுந்த பயணிகளில் சிலர் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர். காணாமல் போன சிலரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். படகுத்துறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு சிறிய படகு அந்த மிதவைப்பாலத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றில் கவிழ்ந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.