சினிமாவை விஞ்சும் சம்பவம் - ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்ன பெண் அதிகாரி சுட்டுக்கொலை

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மலைச்சரிவில் ஓட்டல் கட்டியுள்ளவர்களை எச்சரித்த நகர திட்டமிடல் உதவி பெண் அதிகாரி மூன்று மணி நேரத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். #Kasauli
கொல்லப்பட்ட அதிகாரி (வட்டத்திற்குள்), கொலையாளி விஜய் சிங் (இடது புறம்)
கொல்லப்பட்ட அதிகாரி (வட்டத்திற்குள்), கொலையாளி விஜய் சிங் (இடது புறம்)
Published on

சிம்லா:

இமாச்சலப்பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற மலைப்பாங்கான பகுதியில் பலர் விதிமுறைகளை மீறி ஓட்டல்கள் கட்டியுள்ளனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகள் உடனே அகற்ற வேண்டும் என கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலுடன் ஆக்கிரமிப்பு ஓட்டல்கள் கட்டியுள்ளவர்களை எச்சரிப்பதற்காக நகர திட்டமிடல் துறை பெண் அதிகாரி ஷாலி பால சர்மா என்பவர் சக அதிகாரிகளுடன் நேற்று அப்பகுதிக்கு சென்று விதிமுறைகளுக்கு புறம்பாக ஓட்டல் கட்டியுள்ளவர்களை எச்சரித்துள்ளார்.

அப்போது, ஓட்டல் உரிமையாளர்களுக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர், ஒரு வாரத்திற்குள் விதிமுறையை மீறி கட்டியுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என அதிகாரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதனை அடுத்த சிலமணி நேரங்களில் அங்குள்ள ஓட்டல் உரிமையாளர் விஜய் சிங் என்பவர் பெண் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில், மற்றொரு அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். இந்த சம்பவம் அந்த மாநிலத்தை அதிர வைத்துள்ளது.

இதற்கிடையே, இன்று ஷாலி பால சர்மா சுட்டுக்கொல்லப்பட்டதை தானே முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை? என அம்மாநில அரசை கேள்விகளால் துளைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Kasauli

X

Maalai Malar
www.maalaimalar.com