நிதி செலவிடப்பட்டது குறித்து கணக்கு கேட்க அமித் ஷா யார்? - சந்திரபாபு நாயுடு ஆவேசம்

மத்திய அரசு ஆந்திராவுக்கு ஒதுக்கிய நிதியை செலவிட்டது தொடர்பாக ஆவணங்களை ஆந்திர அரசு அளிக்கவில்லை என அமித்ஷா கூறியிருந்த நிலையில், ‘கணக்கு கேட்க அமித்ஷா யார்?’ என சந்திரபாபு நாயுடு ஆவேசமாக கேட்டுள்ளார். #AmitShah
நிதி செலவிடப்பட்டது குறித்து கணக்கு கேட்க அமித் ஷா யார்? - சந்திரபாபு நாயுடு ஆவேசம்
Published on

அமராவதி:

டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, “ஆந்திர தலைநகர் அமராவதி கட்டுமானத்திற்கு மத்திய அரசு 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், சந்திரபாபு நாயுடு அரசு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. மேலும், நிதி செலவிடப்பட்டதற்கான ஆவணங்களை இன்னும் அளிக்கவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், விஜயவாடா நகரில் நடந்து வரும் தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் இன்று பேசிய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, “செலவின கணக்கு ஆவணங்களை கேட்க அமித்ஷா யார்? இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள விவகாரம். ஆவணங்களை அளிக்கவில்லை என பிரதமர் அலுவலகமோ, மத்திய அரசோ கூறியுள்ளதா?” என தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக கூறினார்.

பாஜக தலைமையிலான கூட்டணி அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது என சில நாட்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடு பேசியது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com