

ஜெய்ப்பூர்:
பாலிவுட் திரைப்படமான பத்மாவத் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாக உள்ளது. ராஜ்புத் சமூகத்தை தவறாக இந்த படம் சித்தரித்ததாக கூறி கர்னி சேனா உள்ளிட்ட பல அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படம் வெளியாக உள்ள தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. குஜராத், ஜார்கண்ட் மாநிலத்தில் இதனால் வன்முறை நிலவுகிறது.
இந்நிலையில், நாளை கொண்டாடப்பட உள்ள குடியரசு தினவிழாவில் பத்மாவத் படத்தில் இடம்பெற்றுள்ள கூமர் என்ற பாடலுக்கு நடனம் ஆடக்கூடாது என ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உதய்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ஷர்மா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளி ஆண்டு விழாவில் இந்த பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடியதால், கர்னி சேனா அமைப்பு பள்ளியை சூறையாடியது குறிப்பிடத்தக்கது.