வருமான வரி சோதனை பரபரப்புக்கு நடுவே தினகரன் நடத்திய கோமாதா பூஜை

தமிழகம் முழுவதும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், டிடிவி தினகரன் தனது வீட்டில் கோமாதா பூஜை செய்தார்.
வருமான வரி சோதனை பரபரப்புக்கு நடுவே தினகரன் நடத்திய கோமாதா பூஜை
Published on

சென்னை:

சசிகலா, தினகரனின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுவலகத்தில் தொடங்கிய இந்த ரெய்டு நமது எம்.ஜி.ஆர், போயஸ் கார்டன், மிடாஸ் ஆலை என கோடநாடு எஸ்டேட் வரை நீடித்தது.

இந்த சோதனை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், டி.டி.வி.தினகரனும், அவர் குடும்பத்தினரும் சென்னை அடையாறில் உள்ள வீட்டில் கோமாதா பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்திருந்தனர். வருமான வரி சோதனைக்கு அதிகாரிகள் வருவதால் போலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டிருந்தது.

போலீசார் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு தினகரன் கோமாதா பூஜையை நடத்தினார். இதற்காக கருப்பு-சாம்பல் நிற பசு மாட்டை கன்றுடன் தயாராக கொண்டு வந்திருந்தனர். அந்த பசு மாட்டுக்கு மாலை அணிவித்து பூஜைகள் நடத்தப்பட்டது. டி.டி.வி.தினகரனும், அவர் மனைவி அனுராதாவும் அந்த பசு மாட்டை சுற்றி வந்து வழிபட்டு வணங்கினார்கள். அந்த மாட்டுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு அந்த பசு மாட்டுக்கு அவர்கள் இருவரும் வாழைப்பழம் சாப்பிட கொடுத்தனர்.

சஷ்டி திதி, புனர்பூச நட்சத்திர சுபமுகூர்த்த நாள் என்பதால் இந்த கோ பூஜையை அவர்கள் செய்ததாக தெரிகிறது. பொதுவாக செல்வம் பெருகவும், சோதனைகளை கடந்து சாதனைகள் படைக்கவும் ஜோதிட ரீதியாக கோமாதா பூஜை செய்யப்படுவதுண்டு. டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரும் அந்த நேரத்தில் இன்று கோ பூஜையை நடத்தியதாக தெரிகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் தினகரனும் அவர் மனைவியும் கொஞ்சமும் பதற்றமின்றி இந்த பூஜையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினகரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை என அவர் விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com