உலகக் கோப்பை கால்பந்து: முதல் நாக்-அவுட் போட்டியில் கனடா 1-0 கணக்கில் வெற்றி

கனடா அணி இறுதி நிமிடங்களில் வலுவான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் தாக்குப்பிடித்தது.
உலகக் கோப்பை கால்பந்து: முதல் நாக்-அவுட் போட்டியில் கனடா 1-0 கணக்கில் வெற்றி
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் நாக் அவுட் போட்டியில் கனடா அணி வெற்றி பெற்று அசத்தியது. லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் நடந்த இந்த போட்டியின் இரண்டாம் பாதி வரை பரபரப்பு ஓயவில்லை.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை.

காத்திருப்பு:

இதையடுத்து தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் கோல் கணக்கை தொடங்கி வெற்றி பெற இரு அணிகளும் தீவிர முயற்சியை மேற்கொண்டன. எனினும், ஆட்டத்தின் முதல் கோல் அடிப்பதற்கான காத்திருப்பு நீண்டது.

போட்டியின் இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ கோல் அடித்தார். இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் தனது முதல் நாக்-அவுட் போட்டியில் வெற்றி பெற்ற கனடா, ஞாயிற்றுக்கிழமை அன்று தென் ஆப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

தற்காப்பு ஆட்டம்:

சோஃபி மைதானத்தில் நடந்த ஒரு பரபரப்பான போட்டி கூடுதல் நேரத்தை நோக்கிச் சென்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் எஃப்சி அணிக்காக தொழில்முறையாக விளையாடும் யூஸ்டாக்கியோ, பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து ரான்வென் வில்லியம்ஸின் வலையின் கீழ் மூலைக்குள் ஒரு அற்புதமான கோல் அடித்தார்.

தொடரை இணைந்து நடத்தும் நாடான கனடா, இறுதி நிமிடங்களில் வலுவான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் தாக்குப்பிடித்தது. இதன் காரணமாக ஜூலை 04-ஆம் தேதி (சனிக்கிழமை) ஹூஸ்டனில் நெதர்லாந்து அல்லது மொராக்கோவை எதிர்கொள்ள முன்னேறியது.

கனடா தனது முதல் மூன்று போட்டிகளை டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள தனது சொந்த மண்ணில் விளையாடியது. ஆனால் கடந்த புதன்கிழமை சுவிட்சர்லாந்து அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த காரணத்தால், உலகக் கோப்பையை நடத்தும் முதல் நாடாக வெளியூரில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com