

கட்டாக்:
ரோஸ் வேலி நிதி நிறுவனத்தில் ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், ரோஸ் வேலி நிதிநிறுவன மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதீப் பண்டோபாத்யாய் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஒடிசா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு கட்டாக்கில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு மீது நீதிபதி தாஸ் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இதில் வாதப் பிரதிவாதங்கள் மே 8-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், சுதிப் பண்டோபாத்யாய்க்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். விசாரணை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.