

போடி:
பருவமழை பொய்த்து போனதால் தேனி மாவட்டத்தில் வறட்சி நீடித்து வருகிறது. போடி பகுதியிலும் விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. பல விவசாயிகள் நெல்சாகுபடியை கைவிட்டு மானாவாரி விவசாயத்திற்கு மாறினர். இதனால் பொதுமக்கள் மழை எப்போது வரும் என வானத்தையே வெறித்து பார்த்திருந்தனர்.
போடி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த சாரல் மழை காரணமாக மானாவாரி பயிர்களான சோளம், கம்பு, குதிரைவாலி ஆகியவற்றை பயிரிட்டிருந்தனர். தற்போது பெய்த மழையால் அவை செழித்து வளரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மழையினால் போடி, அணைக்கரைப்பட்டி, மரக்காமலை, கவுல், குரங்கனி உள்பட பல பகுதிகளில் மாங்காய்கள் மரத்திலிருந்து உதிர்ந்து விழுந்து நாசமானது. இவை அனைத்தும் பறிக்க தயாரான நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.