

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து வருகின்ற 4ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் பணியாற்றியவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் ஓய்வுக்காக கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்புகளில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. கட்சிகளுக்கு ஆதரவாக வெவ்வேறு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் அதிகபட்சமாக தி.மு.க. முதல் இடத்திலும், அ.தி.மு.க. 2ம் இடத்திலும், த.வெ.க. 3-வது இடத்திலும் வரும் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான குணாகுகை பகுதியில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். திடீரென்று அந்த பகுதியில் ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் கூடி டி.வி.கே..., டி.வி.கே... என சத்தமாக முழக்கமிட்டும், விசில் அடித்தும், த.வெ.க. கொடியை அசைத்தும் வீடியோ வெளியிட்டனர். இதனை பார்த்து அங்கிருந்த மற்ற கட்சியினரும், சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து த.வெ.க.விற்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது என பலரும் கூறி வரும் நிலையில் சுற்றுலாத் தலங்களிலும் ஆரவாரத்துடன் இது போன்ற வீடியோக்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், தேர்தல் முடிவுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாவும், த.வெ.க. எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தனர்.