

தவெக அரசு நேற்று தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிலையில், செயல் திட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
“முந்தைய அரசின் வரலாற்று ஊழல் காரணமாக அதிருப்தி அடைந்த தமிழ்நாடு மக்கள், மாற்றத்தை எதிர்பார்த்துதான் தவெக அரசுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலத்திற்கு பின்னரும் முந்தைய அரசு மீது புகார் கூறியே தவெக அரசு நாட்களை நகர்த்த முடியாது.
இந்த வெள்ளையறிக்கை மூலம் தவெக அரசு என்ன சொல்ல வருகிறது? தேர்தல் பிரசாரத்தின் போது அள்ளிக் வீசிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தவெக அரசு சொல்கிறதா? கடந்த திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை, ஊழல், தவறான நிதி மேலாண்மை போன்ற காரணங்களை காட்டிவிட்டு நீங்கள் சும்மா இருக்க முடியாது.
முதலமைச்சர் விஜய்யிடம் தமிழ்நாடு மக்கள் எதிர்பார்ப்பது, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைதான். முந்தைய அரசின் அவலங்களை கூறி அவர் தப்பித்துக் கொள்ள முடியாது. கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற போகிறோம்? தமிழ்நாடு அரசின் நிதி மேலாண்மை திட்டம் என்ன? என்பதை விளக்கும் செயல் திட்ட அறிக்கையையும் வெளியிட வேண்டும்.
திமுக அரசு ஏற்படுத்திய நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதை தாண்டி, அதனை சரி செய்வதற்கு இருக்கும் வழிகள் என்ன? நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இருக்கும் திட்டம் என்ன? என்பதையெல்லாம் தமிழ்நாடு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை தவெக அரசுக்கு இருக்கிறது.
திமுகவின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்ள தவெக அரசு முயலக்கூடாது. வாக்குறுதி அளித்தபடி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திட தவெக அரசு முனைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.