பேரணாம்பட்டில் பரபரப்பு: பெண்ணை கொன்று நகை கொள்ளை- உறவினர்கள் மறியல்

வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது.
பேரணாம்பட்டில் பரபரப்பு: பெண்ணை கொன்று நகை கொள்ளை- உறவினர்கள் மறியல்
Published on

பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). தம்பதியருக்கு பாண்டியன் (25), அசோக்குமார் (23) என்ற 2 மகன்களும், அபிநயா (19) என்ற மகளும்  உள்ளனர்.

வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். நேற்று மதியம் 12 மணியளவில் ஆடுகளை அருகில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.

ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீட்டிற்கு தேவையான விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வளர்மதி காதில் அணிந்திருந்த 1/2 பவுன் நகைக்காக அவரது காதை கத்தியால் அறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி அங்கிருந்து தப்பி ஓடினார்.

வளர்மதியை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அவரை மடக்கி கழுத்து அறுத்து கொலை செய்தனர்.

ரத்த வெள்ளத்தில் வளர்மதி பிணமாக கிடந்தார். மாலை 4 மணிக்கு அந்த வழியாக சென்ற மலர் என்ற பெண் வளர்மதியின் பிணத்தைப் பார்த்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக இதுகுறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த குடியாத்தம் டிஎஸ்பி பொறுப்பு இருதயராஜ் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சாரா சம்பவ இடத்திலிருந்து சாத்கர் கிராமம் கீழ் ரோடு வழியாக கானாற்றில் உள்ள கிணறு வரை 2 கிலோமீட்டர் தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கைரேகை நிபுணர் தமிழ்மணி, தடவியல் நிபுணர் சேதுராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வளர்மதியின் பிணைத்த மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வளர்மதியின் கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி வளர்மதியின் உறவினர்கள் மற்றும் சாத்கர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com