என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேப்பாக்கத்திற்குள் விசிலுக்கு தடை... சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! நாஞ்சில் சம்பத்
- பல பொருட்கள் கொண்டு செல்ல தடை.
- மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்களிடம் இருந்து "விசில்" பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளானது. சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய போட்டியின் போது ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் "விசில்" சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..! சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதி விஜய்யின் ஆட்சி நடக்கும்..!" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாதது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் (TNCA) விளக்கம் அளித்தது. அதன்படி, "சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் தடை செய்யப்பட்டதற்கும் பிசிசிஐ, ஐசிசி மற்றும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசிலுக்கு தடை என்ற தகவலை மட்டும் போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்," என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.






