

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசின் புதிய அட்வகேட் ஜெனரால் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞரான விஜய் நாராயணை நியமித்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் விஜய் நாராயணன் அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் (2017 முதல் 2021 வரை) தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகச் செயல்பட்டவர். இவர் முன்னாள் இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட நுணுக்கங்களில் தேர்ந்த வல்லுநரான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளில் வாதாடியவர். விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி வரி வழக்கில், விஜய் சார்பில் வழக்கறிஞராக ஆஜராகி விஜய் நாராயண் வாதாடியுள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி மிக முக்கியமானது.
முன்னதாக தி.மு.க. ஆட்சியில் அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்த பி.எஸ். ராமன் தனது பதவியை நேற்று (மே 12) ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.