

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்-யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சார்பில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், "ஃப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைப்பதை தவிர்த்துவிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்" என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி அன்னதானம் வழங்குதல், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், வேட்டி சேலை வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தவெக தொண்டர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் தவெக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தார்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு புடவைகள் வழங்கியும், மரக்கன்றுகளை கொடுத்தும், சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அமைச்சர் பர்வேஸ் வழங்கினார்.