கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம் அவரிடம் பேசி உள்ளார்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்த காட்சி
கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்த காட்சி
Published on

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (48) பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார். அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம் அவரிடம் பேசி உள்ளார்.

பின்னர் இறுதியாக ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி வருண் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி. ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com