

வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அம்மா உணவகம் பின்புறம் தி.மு.க. சார்பில் வேலூர் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் இளைஞர்களுக்கு நேற்று காலை விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
இது பற்றி தகவல் அறிந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. கட்சியினர் விளையாட்டு உபகரணங்கள் வழங்க உள்ள பகுதிக்கு திரண்டு சென்றனர்.
அவர்கள் விளையாட்டு உபகரணங்கள் வழங்க கூடாது என்று கூறினர். மேலும் இது பற்றி வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் உதவி கலெக்டருமான செந்தில்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.
அவர் தேர்தல் நிலை குழு அலுவலர் சதீஷ் வேலன் தலைமையில் விரைந்து வந்தனர்.
விளையாட்டு உபகரணங்கள் வழங்க கூடாது என்று எச்சரித்தனர். உடனே காரில் வந்த மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் கவுன்சிலர் சதீஷ்குமார் ஆகியோர் காரை நிறுத்தாமல் சென்று விட்டனர்.
இதுகுறித்து வேலூர் மாநகர அ.தி.மு.க செயலாளர் அப்பு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.
தி.மு.க.வினர் தேர்தல் விதிமுறையை கடைப்பிடிக்காமல் தற்போது விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது. 15-ந்தேதிக்கு முன்பு வழங்கியிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் தேர்தல் நிலைக்குழு அலுவலர் சதீஷ்வேலன் வேலூர் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதில் தேர்தல் விதிமுறையை மீறி விளையாட்டு உபகரணங்கள் வழங்க காரில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் வந்திருந்தார்.
அந்தக் காரை நிறுத்தி நாங்கள் சோதனை செய்ய முயன்ற போது அந்தக் கார் நிற்காமல் சென்று விட்டது என புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் வேலூர் மாநகராட்சி மேயரின் காரை பறிமுதல் செய்தனர். அதனை சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 27-வது வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார், கார் டிரைவர் கோபிநாத் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.