திருவண்ணாமலை அருகே வி.சி.க. பிரமுகர் கொலை - 2 பேர் கைது

கலசப்பாக்கம் போலீசில் கடந்த ஆண்டு காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமராஜ் பரிதாபமாக இறந்தார்.
காமராஜ்
காமராஜ்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60), வக்கீலான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பொது குழாயில் தண்ணீர் எடுப்பது குறித்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தகராறு குறித்து கலசப்பாக்கம் போலீசில் கடந்த ஆண்டு காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை காமராஜ் மற்றும் அவரது நண்பர் ராஜா இருவரும் நாயுடுமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கும்பல் காமராஜ் மற்றும் ராஜா இருவரையும் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலசபாக்கம் போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக காமராஜ் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமராஜ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து காமராஜின் சகோதரர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கருணாநிதி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக விசிக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சொரகொளத்தூர் மற்றும் நாயுடு மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com