ஈமு கோழி மோசடி வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்ற கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் 2 போலீசார் சஸ்பெண்டு

நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கைதி தப்பி ஓடிய விவகாரத்தில், போலீஸ்காரர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஈமு கோழி மோசடி வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்ற கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் 2 போலீசார் சஸ்பெண்டு
Published on

சேலம்:

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாப்பி செட்டிப்பள்ளி ராசன்னப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இனோ ஆண்ட்ரூஸ் (வயது 41). இவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் ஈமு கோழி மோசடி வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் கோவை டான்பிட் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இனோ ஆண்ட்ரூஸ்-க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து இனோ ஆண்ட்ரூஸ் தலைமறைவானார். இந்த நிலையில் கடந்த வாரம் சேலம் அன்னதானப்பட்டி லாட்ஜ் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இனோ ஆண்ட்ரூஸ் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்தனர்.

அவரை பிடித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கடந்த கடந்த 30-ம் தேதி அவரை குற்றப்பிரிவு போலீசார் செல்வகுமார், கேசவன் ஆகியோர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி தெரிவித்தார். இதனால் இனோ ஆண்ட்ரூசை, 2 போலீசாரும் தனியார் லாட்ஜிற்கு அழைத்துச் சென்று இரவு அங்கு தங்கினர். அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரர்களை அறையில் விட்டு விட்டு, நைசாக வெளியே வந்த இனோ ஆண்ட்ரூஸ், கதவை வெளிபக்கமாக பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

அதன் பிறகு போலீசார் எழுந்து பார்த்தபோது அறை கதவு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததும், இனோ ஆண்ட்ரூஸ் தப்பிச் சென்று விட்டதும் தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.சிவகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் தனிப்படை போலீசார் தப்பி ஓடிய இனோ ஆண்ட்ரூசை தேடி வருகின்றனர்.

இதனிடையே, கைதி தப்பி ஓடிய விவகாரத்தில், போலீஸ்காரர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com