திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: நடுவழியில் ரெயில் நிறுத்தம்- பயணிகள் அவதி

தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: நடுவழியில் ரெயில் நிறுத்தம்- பயணிகள் அவதி
Published on

திண்டிவனம்:

சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி ரெயில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டதால் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இது குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பாண்டிச்சேரி ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்டவாளத்தில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர்.

தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்டவாளத்தை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்த பின் திண்டிவம் நோக்கி ரெயில் வந்து கொண்டிருக்கிறது. என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com