கோடை விழா முடிந்த பின்னரும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- வியாபாரிகள் மகிழ்ச்சி

வார விடுமுறையை கொண்டாட குழந்தைகளுடன் பெற்றோர்கள் கொடைக்கானலுக்கு அதிக அளவு வருகை தந்துள்ளனர்.ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தவாரே தரையிரங்கிய மேக கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
கோடை விழா முடிந்த பின்னரும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- வியாபாரிகள் மகிழ்ச்சி
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதமான சீதோசனமும், இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்களை கவரும் வண்ண மலர்களும் இருப்பதால் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடைகாலத்தில் அதிக அளவு மழை பெய்ததால் வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல், பியர்சோழா அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனை சுற்றுலா பயணிகள் தொலைவில் இருந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வார விடுமுறையை கொண்டாட குழந்தைகளுடன் பெற்றோர்கள் கொடைக்கானலுக்கு அதிக அளவு வருகை தந்துள்ளனர். குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கோடை விழா முடிந்தும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தவாரே தரையிரங்கிய மேக கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

கோடை விழா முடிந்த பின்னரும் வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இருப்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com