என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்- வேல்முருகன்
- சர்வாதிகார ஆட்சிக்கு தயாராகிவிட்ட மோடியை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கண்டிப்பதற்கு கூட தயாராக இல்லை.
- டாடா நிறுவனம் ஓசூரில் பத்தாயிரம் ஜார்க்கண்ட் தொழிலாளர்களை கொண்டு வந்து இறக்கி இருக்கிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னணி இயக்கம் சார்பில் முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் பேசியதாவது:-
தமிழ்நாடு இன்று எவ்வளவு பெரிய இன்னல்களை, துன்பங்களை, நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் ஒரு எம்.எல்.ஏ என்பதால் அறிய முடிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் மத்திய அரசு ஏற்ற அரசாக இருந்து கொண்டு ஒரு மாநில முற்றதிகாரத்தையே தனதாக்கிக்கொண்டு ஒரு காட்டு தர்பார் ஆட்சியை பா.ஜ.க. செய்து கொண்டிருக்கிறது .
சர்வாதிகார ஆட்சிக்கு தயாராகிவிட்ட மோடியை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கண்டிப்பதற்கு கூட தயாராக இல்லை. யாராவது இது குறித்து நீதிபதிகள் பேசினால் சுப்ரீம் கோர்ட் நீதிபதியே பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்று அவர்களை சங்கிகள் தன் கையில் எடுக்கின்ற நிலை உள்ளது.
இதில் பெரும்பான்மையான விசயங்களை சட்டசபையில் நான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சருக்கும் எனக்கும் சண்டை அல்லது அவரது அமைச்சர்களுக்கு எனக்கும் சண்டை என்றுதான் சட்டசபை நடந்தேறிக் கொண்டிருக்கிறது
டாடா நிறுவனம் ஓசூரில் பத்தாயிரம் ஜார்க்கண்ட் தொழிலாளர்களை கொண்டு வந்து இறக்கி இருக்கிறார்கள். இதனை கேட்பதற்கு நாதியில்லை, சட்டசபையில் இது குறித்து நான் கேட்டேன், அமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மாற்றம் செய்யப்படும் என்று சொன்னார், ஆனால் மத்திய அரசு இதுவரை மாற்ற விடவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தொடர்ச்சியாக சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணங்களை உயர்த்தி பல மடங்கு பொதுமக்களுக்கு அன்றாட தேவைகளுக்கு தேவையான பொருள்களின் விலையை உயர்த்தி மக்களை துயரத்தில் ஆளாக்கி வருகின்றனர்.
சுங்கச்சாவடி என்பது அமைக்கப்பட்ட பிறகு பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட பிறகு ஆண்டுக்கு இருமுறை கட்டணத்தை குறைப்பது தான் ஒரு நியாயமான நடவடிக்கையாக இருக்கும். ஆனால் அதற்கு நேர் மாறாக பன்னாட்டு பணக்கார பெரும் நிறுவனங்கள் இந்திய மக்களுடைய பணங்களை குறைந்த வட்டி விகிதங்களில் தேசிய வங்கிகளில் கடனாக பெற்று அதை நாங்கள் சாலை விரிவாக்கத்திற்காக முதலீடு செய்கிறோம் என்கிற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பகல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இதை எதிர்த்து தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது . தமிழக வாழ்வுரிமை கட்சியின் பிரதான கோரிக்கை இந்த சுங்கச்சாவடிகளை முழுவதும் அகற்ற வேண்டும் என்பது தான் என்றார்.






