என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி
- தேர்வர்கள் இன்று முதல் (15-ந்தேதி) அடுத்த மாதம் 13-ந்தேதி வரை தேர்வாணைய இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அன்று நடைபெறும்.
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபாலசுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025-ம் ஆண்டிற்கான ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டவாறு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இன்று முதல் (15-ந்தேதி) அடுத்த மாதம் 13-ந்தேதி வரை தேர்வாணைய இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அன்று நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யு.பி.ஐ. மூலமாகவும் செலுத்தலாம்.
தொடர்ச்சியாக 13-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர் விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு தொகுதி IIA பணிகளின் தேர்வுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
2018 முதல் 2025 வரை உள்ள 8 ஆண்டுகளில் முதன் முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II மற்றும் IIA பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். மேலும் அரசுத்துறை, நிறுவனங்களிடம் இருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






