

தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதனால் வரலாற்று சாதனையாக இத்தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அனைவராலும் உற்று நோக்கப்படும் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு என முறையான காரணங்களுக்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்க அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.